Friday, June 6, 2025

தமிழ் வழி கல்வி அவமானம் அல்ல அடையாளம்!


My_Student

தமிழ் வழி கல்வி அவமானம் அல்ல அடையாளம்!

2006  ஆம் ஆண்டு இவர்கள்
கார்மல்  மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம்  வகுப்பு தமிழ் வழி பிரிவில் பயின்றவர்கள்.
2010 ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து கல்லூரி கல்விக்கு பயணித்தவர்கள்...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு...
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு ஆய்வு கட்டுரை தயார் செய்வதற்காக 5 மாணவர்கள்கொண்ட குழுவை அமைத்து மூன்று மாதங்கள் ஒரு தலைப்பில் ஆய்வு செய்வது வழக்கம்.
அப்படி அறிமுகமான இந்த ஐவரில் பிரதீப் தற்போது துபாயில் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணி புரிகிறார்.
ரூஸ்வெல்ட் இவர்தான் குழுவின் தலைவர்.
தற்போது வங்கி மேலாளர் தேர்வில்  தேர்ச்சி பெற்று பயிற்சியில்  உள்ளார்.
மதன் அவர்கள் அப்போதே வித்தியாசமாக சிந்திப்பவர்.
படைப்பாற்றல் திறன் மிக்க பேச்சாளராகவும் நகைச்சுவை ததும்ப பேசுபவர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரு பொறியியல் கல்லூரியில்
பொறியியல் பட்டப்பிரிவில் படிக்கும்போது நான்காவது வருட மாணவர்களுக்கு
ப்ராஜெக்ட் என்னும் செயல்திட்டத்தை வழங்குவது வழக்கம்.

அவரது துறை தலைவர் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தலைப்பை கொடுத்து இதனை செய்து வாருங்கள் என்று கூறும் போது மதன் மட்டும் தனக்குத் தேவையான தலைப்பை தானே உருவாக்கி அதனை சுயமாக செய்வதாக உறுதி கூறி செய்தும் காட்டினார்.

பெரும்பான்மையான கல்லூரிகளில் அந்த துறைத்தலைவர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த செயல்திட்டத்தை கொடுத்து அதனைக் காட்சிப்படுத்தி
அதற்கான அகமதிப்பீட்டை வழங்குவது வழக்கம்.
ஆனால் மதன் மட்டும் மாறுபட்டு ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
அதற்காக பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கண்காட்சியில் மதனுக்கு முதல் பரிசு கிடைத்தது.
"இது எவ்வாறு உன்னால் சாத்தியமானது ?"என்று அந்த துறைத்தலைவர் கேட்டபோது,

நாங்கள் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே இதுபோன்ற செயல்திட்டங்களை எங்கள் பள்ளியில் செய்து உள்ளோம் என்று அமைதியாக புன்னகையுடன் பதில் உரைத்துள்ளார்.
அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.
அப்போது அதனை பகிர்ந்து கொண்டார்.
நானும் அவனை பாராட்டினேன்.
கல்வியின் உண்மையான பலன் இதுதான் என்று கூறினேன்.
பல இடங்களில் இவர்களைப் பற்றி எடுத்துரைப்பதுண்டு
நேற்று ஒரு தேநீர் கடையில் தேனீர் பருகி கொண்டிருக்கும்போது என் அருகில் வந்து பவ்யமாக நின்று என்னை உங்களுக்கு தெரிகிறதா?
என்று கேட்டார்.
வயதின் காரணமாக
அவனது முகமும் அந்தப் புன்னகையும் மட்டும் மனதில் இருந்தது பெயர் மறந்து இருந்தது.
நினைவு படுத்தி பார்த்தேன்.
என்னிடம் பயின்றவர் என்று எனக்கு நினைவு உள்ளது ஆனால் பெயர் மறந்து விட்டதே என்று கூறினேன்.

ஐயா நான் எம் எஸ் மதன்
என்று கூறியவுடன் மிகுந்த மகிழ்ச்சி அவனை அனைத்து கொண்டேன்.

ஒரு ஆண்டுக்கு
300 மாணவர்களை கடந்து செல்கின்றோம்.
அவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆசிரியர் மனதில் தாக்கத்தை உருவாக்கி செல்கின்றனர்.
மதனும் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியவர்.

அத்துடன் ஒரு மகிழ்ச்சி மிக்க செய்தியை பகிர்ந்தார்.


அதாவது 2025 ஆம் ஆண்டு டி. என் .பி.எஸ்.சி. குரூப் 1
தேர்வில் தேர்ச்சி பெற்று
டி.எஸ்.பி ஆக பொறுப்பேற்க உள்ளார்.
ஏப்ரல் பத்தாம் தேதியே எனக்கு அவை குறித்து முதன் முறையாக குறுஞ்செய்தி வழியாக தகவலை தெரிவித்து இருந்தார்.
தற்போது நேரில் பார்த்த போது மிகுந்த மகிழ்ச்சி.

எப்படி ஒருநாள் சாதிக்க முடிந்தது?என்று கேட்டபோது
சென்னையில் நான்காண்டுகள் வெற்றி ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றதாகவும் இரண்டு முறை முயற்சியை தவற விட்டு மூன்றாவது முறை வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
மேலும் அவருக்கு தாக்கங்கள் ஏற்படுத்திய ஒரு சில ஆசிரியர்களை பற்றி கூறும்போது
"Please mention about Gerald Simon Sir (he was the spark to initiate leadership in me during 6th D)
-Dominic raj Sir (my guru and role model )
Mr.Franklin sudhar sir  ( i still remember his individual care and attention on students)
-Thangasami Sir ( one of my grandfather -motivated me alot )
-- Jelastin Sir (NSS ) ,he inspired me about selfless service and my tamil teacher 
-Jegaseelan Sir (our project guide )"♥️


தமிழ் வழியில் கல்வி கற்றால் சாதிக்க முடியாது என்று எண்ணும் ஒரு சில பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மதன் பாடமாக இருப்பார்.
கல்வி என்பது தேடலின் அடையாளம்.
அத்தகைய அறிவு தேடலை பள்ளியும் அவனுக்கு அமைந்த ஆசிரியர்களும்
அவனுள் உருவாக்கினர்.
அந்தத் தேடலை
இன்று ஒரு உயரிய பதவி
அவரை நோக்கி வர காரணமாக அமைந்திருந்தது.

அதுபோல வகுப்பறை கல்வியை விட வகுப்பறையை விட்டு வெளியே கற்றுக்கொள்ளும்
கல்வியும் அவருக்கு நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும்.

வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு
"எங்களிடம் பயின்றுள்ளாய்..
நீதி நேர்மை ஒழுக்கம் கடமை கண்ணியம் அனைவரையும் சமமாக பார்க்கும் சமூக பார்வை இவை என்றும் உங்களுக்குள் அணையாத தீபமாக ஒளி வீச வேண்டும்.
என் மாணவன் டிஎஸ்பி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்ற பெருமையை விட
என் மாணவர் சிறந்த காவல்துறை அதிகாரியாக மக்கள் போற்றும் அதிகாரியாக பணி செய்கிறார் என்ற செய்தி தான் எனக்கு பெருமையாக இருக்கும்.
அதனை என்றும் காப்பாற்ற வேண்டும்" என்று கூறி வாழ்த்தினேன்.

வாழ்த்துக்கள் மதன் சார்!

-- ஜே.ஆ டோமினிக் ராஜ்
பள்ளி ஆசிரியர்,
நாகர்கோவில்

Sunday, December 22, 2024

அருட்தந்தை அல்போன்ஸ் வில்லியம் சே.ச.அவர்கள் மறைவு

Carmel_ngl

#RIP
22.12.2024....

அன்புத் தந்தைக்கு ஆழ்ந்த இரங்கல்.

அருட்தந்தை.M. அல்போன்ஸ் வில்லியம் சே.ச. அவர்கள் 
இன்று காலை 7 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 

22.02.1949 அன்று பிறந்த அருட்தந்தை அல்போன்ஸ் வில்லியம் அவர்கள் 
05.01.1967 அன்று இயேசு சபையில் சேர்ந்து 
13.04.1980 இல் இயேசு சபை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டவர்.

நமது கார்மல் பள்ளியில் 
1982 -83 ஆம் ஆண்டில் சேவியர் இல்ல மாணவர்கள் விடுதியில் கண்காணிப்பாளராக இருந்து செயல்பட்டவர்.
1983 முதல் 1986 வரை கார்மல் இல்லத்தின் அதிபர் தந்தையாக திறம்பட செயல்பட்டவர்.
ஏராளமான மாணவர்களை உருவாக்கிய ஆளுமை மிக்கவர். 

இளம் குரு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் ஏதாவது ஒரு கிராமங்களில் கள செயல்பாடுகளை கொண்டு செல்வதற்காக லசாக் என்னும் இயக்கத்தை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவர். 
பின்பு அதனை அனைத்து இயேசு சபை பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு செல்ல காரணமாக இருந்தவர். 
Leadership and social awareness camp -LASAC 
என்ற அமைப்பை எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பதின் பருவத்தின் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களிடம் உருவாக்கி அவர்களை சமூக அக்கறை உள்ளவர்களாக... தலைமை பண்பு மிக்கவர்களாக உருவாக காரணமாக இருந்தவர்.


குறிப்பாக கோடை காலத்தில் ஐந்து நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள இயேசு சபை பள்ளி லசாத் மாணவர்களுக்கு நடக்கும் கோடை முகாம் சிறப்புமிக்க அனுபவமாக இருக்கும். 

அருட்தந்தை மரிய சிகாமணி சே. ச. அவர்களுக்குப் பின்பு 
2000 முதல் 2004 வரை கார்மல் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் தாளாளராகவும் திறம்பட செயல்பட்டவர். 

அப்போது ஆசிரியர் அலுவலர் செயலராக இருந்த நினைவில் வாழும் திரு அந்தோணி முத்து ஆசிரியர் அவர்கள் 
அருட்தந்தையை அறிமுகம் செய்து பேசும்போது 
"அருட்தந்தை சிகாமணியும் அருட்தந்தை வில்லியம் அவர்களும் இயேசு சபையில் இரு ஏஞ்சல்கள் போன்றவர்கள்" 
என்று குறிப்பிட்டு பேசியது என்றும் நினைவில் இருக்கின்றது. 

கார்மல் பள்ளி மாணவர்களுக்கு 
பள்ளியில் பாடக் குறிப்பேடுகளை வழங்கும் திட்டத்தை உருவாக்கியதும் இவர் காலத்தில் தான்.

கணிப்பொறி கல்வி அனைத்து இடங்களிலும் பிரபலமாகி வரும் போது நமது பள்ளியிலும் கணிப்பொறி கல்வி உருவாக காரணமாக இருந்தவர். 
அப்போதே சுமார் 24 கணிப்பொறிகளை வாங்கி கணினி ஆய்வுக்கூடத்தை நம்ம வளாகத்தில் அமைத்தவர். 

11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஆய்வுக்கூடம் இருந்த நிலையில் 
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு ஆய்வுக்கூடமும். 

ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடமும் உருவாகச் செய்தவர்.

ஆய்வுக்கூடங்கள் அமைத்ததோடு மாணவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் ஆய்வுக் கூடத்திற்கு கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி அவர்களுக்கான அறிவியல் ஆய்வு பயிற்சி புத்தகத்தை வெளியிட்டவர்.

காலை தனிப் பயிற்சி, மாலை அணி பயிற்சி, இரவு தனி பயிற்சி என்று பின்தங்கிய மாணவர்களை தனிப்பயிற்சி அமைத்து முன்னேறக் காரணமாக அமைந்தவர்.

தாவரக் கண்காட்சிகளை அமைத்து மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு கண்காட்சி வைத்து 
அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கி பாராட்டியவர்.
கண்காட்சியில் கொண்டு வந்த அனைத்து தாவரங்களையும் பள்ளி வளாகத்திலேயே வைத்து பராமரிக்கச் செய்தவர் 

இன்று வரை நம் வளாகம் 
தொட்டிச் செடிகள் நிறைந்து இருப்பதற்கு காரணம் அவர் போட்ட விதைதான். 

ஆண்டு விழாக்களையும் விளையாட்டு விழாக்களையும் மிக பிரம்மாண்டமாக நடத்த காரணமாக இருந்தவர்.
கலை வார விழா இவரது காலத்திற்குப் பிறகுதான் 
தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

பின் தங்கிய மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் போது காலாண்டு அரையாண்டு தேர்வு முடிந்து வரும் போது அவர்களை பள்ளி மேடையில் ஏற்றி பரிசலித்து பாராட்டியவர்.

அவர் காலகட்டத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

நமது பள்ளியில் நுழைவுத் தேர்வு பயிற்சி கூடங்கள் அமைத்து 
அவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கி மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் எழுதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர வழி வகுத்தவர்.

அவர் கொடுத்த ஊக்கம் அனைவரையும் ஊக்கத்துடன் படித்து தேர்ச்சி பெற காரணமாக அமைந்திருந்தது.

வேலை செய்பவர்களை மேடையில் ஏற்றி பாராட்டும் அவரது குணம் தனிச்சிறப்பு மிக்கிது. 

ஏழை எளிய மாணவர்கள் மீது அதிக அக்கறையுடன் இறக்கத்துடனும் செயல்பட்டவர். 

அறிவியல் சுற்றுலா மற்றும் இன்ப சுற்றுலா செல்லும்போது யாராவது பணம் இல்லை என்றால் அவர்களையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

விளையாட்டு விழாவில் 
நான்கு அணிகளாக பிரிந்து விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகளின் புள்ளி விவரங்களை தினசரி அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்தவர் 

விளையாட்டு விழா நிறைவின்போது நான்கு அணிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் பரிசு வழங்கி அவர்களை சிறப்பிப்பது இவரது தனி சிறப்புமிக்க நடவடிக்கையாக இருக்கும்.

விளையாட்டு விழா ஆண்டு விழா நிறைவு பெற்றதும் அந்த வளாகம் அந்த இரவே தூய்மையாக ... விழா நடைபெற்றதற்கான 
எந்த ஒரு தடயமும் இல்லாதவாறு வளாகத் தூய்மையை 
பேணிக் காத்தவர்.

மாணவர்கள் கல்வி வசதிக்காக எத்தகைய செலவுகள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்தவர். 

நமது பள்ளி வளாகத்திலேயே கோடைகால முகாம்கள் நடத்தி மாணவர்கள் தனி திறன்களை வளர்த்திட செய்தவர்.

கடமை ...கடமை... கடமை...
இவையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு 
தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியுடன் அருட்பணியும் செய்த அன்பு நெஞ்சம் திண்டுக்கல் பெஸ்கி 
இல்லத்தில் இன்று காலை தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது என்ற தகவல் 
அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருந்தாலும்...
ஏழை எளிய பின் தங்கிய மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு துடித்துக் கொண்டிருந்த அவரது இதய ஒலியை...
 அவரது வழித்தோன்றல்களாகிய மாணவர்களும் ஆசிரியர்களும்
ஏற்று வாழ்வோம். 

அதுவே அன்பு தந்தை அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்! 

-தந்தை அவர்களின் மறைவுக்கு காரணம் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் ,அலுவலர்கள், 
மாணவர்கள், முன்னாள் மாணவர் இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Carmel Hss Nagercoil 

Thursday, August 29, 2024

அன்பு என்ற பெயர் கொண்டோனே....

அன்பு_என்ற_பெயர்கொண்டோனே...

அறிவியல் மனப்பான்மை செயல்:

குடிகார தந்தையால் 
பள்ளியிலிருந்து இடைநிற்கும் சூழல்...
அறிவியல் இயக்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்
திருமதி தேவிஅக்கா அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க
குழந்தை பாதுகாப்பான விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதற்கான கல்வியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஒரு மகிழ்ச்சியான நாள்.

சில
பெற்றோர்களுடைய
பொறுப்பற்ற தன்மையினால். பாதிக்கப்படுவது குழந்தைகளே.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
அவள் நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே"
என்கின்ற பாடல் வரி
உண்மையே.
அன்னையாக இருக்க வேண்டிய ஆசிரியர்களும்
EMIS இன்  பின்பும்
தேர்வின் பின்பும்
பதிவேடுகளின் பின்பும்
ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளை ஏதாவது உரிமையுடன் கண்டித்தால் கூட
அவர்கள் மீது
சமூகமும் சட்டமும்
எடுக்கும் நடவடிக்கைக்கு
ஆளாக்காமல் இருக்க
பாரா முகமாக
கடந்து செல்லும் நிலைகளை தான் கல்வித் துறைகளில் பார்க்கின்றேன்.
அன்புக்காக,
அறிவுக்காக
ஏங்கும் குழந்தைகள்
வயிற்றுப் பிழைப்புக்காக
குடும்பச் சூழல் என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
தடம் மாறியும்
தடுமாறியும்
சென்று கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மட்டுமே
அனைத்துக்கும் விடையாக பார்க்கப்படுவதால்
இயற்கை நுண்ணறிவு
ஓரமாக நின்று  கொண்டுள்ளது.

புள்ளி விவரங்களுக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன.

பல புள்ளி விவரங்கள் தவறாகவும் 
பதிவேற்றம் செய்யப்படக்கூடிய நிலை.

குழந்தைகள் நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் பள்ளிக்கு வராத சூழ்நிலையில்

" டிசியை    வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு போ..."
இந்த வார்த்தைகள் சர்வசாதாரணமாக வந்து விழுகின்றன.

பிரச்சனைகளின் மூலம்
நிர்மூலமாகவே நிற்கின்றது.

முதல் பருவத்திற்கு ஒரு பள்ளி
இரண்டாம் பருவத்திற்கு மற்றொரு பள்ளி
மூன்றாம் பருவத்திற்கு வேறு ஒரு பள்ளி
என்று புலம்பெயரும் மாணாக்கர்கள் சிலர்...

இன்றும் இந்த சிறுமியும் இவரது தம்பியும் இதுபோல் புலம்பெயர்ந்து வந்தவர்களே.

விடுதி உள்ள இடங்களில் என் குழந்தை படித்தால் போதும்
அவர்கள் நல்ல கல்வி கற்றுக் கொள்வார்கள்
என்ற தாயின்
நிலைப்பாட்டை பார்க்கும் போதும்...
வலை கம்பெனியில்
வேலை செய்தாவது
என் குழந்தையை நான் படிக்க வைப்பேன்
என்ற உறுதிப்பாடும்...
பாராட்டத்தக்கவை.

கடந்த சனிக்கிழமை இந்த குழந்தைகளுடன் நானும் அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் அவர்களும் உரையாடிய பின்பு
திங்கள் கிழமை விடுதி உள்ள பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இவரையும். இவரது தம்பி நாலாம் வகுப்பு படிக்கும் குழந்தையும்
அந்தக் காப்பகத்தில் விட்டு வந்த போது
அவர்களது தாயார் கண்களில் கண்ணீர் வந்ததோ இல்லையோ..
என் கண்கள் குளமாகின.

மனிதத்தை தேடிய கல்வி பயணத்தில்
முற்போக்கு அமைப்புகள்
கரம் கோர்த்து பயணிக்க வேண்டிய காலகட்டம்.

ஜே ஆ. டோமினிக் ராஜ்,
கல்வி உபகுழு பொறுப்பாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,கன்னியாகுமரி மாவட்டம்.

நல்ல உள்ளங்களின் உதவிகள்
எதிர்பார்க்கப்படுகின்றது.

Tuesday, August 27, 2024

அறிவியலுக்கான அணிவகுப்பு

அறிவியலுக்காக அணிவகுப்போம்!
🏌️🏌️🏌️💦🧙
ஆறாம் வகுப்பு முதல் பருவம் இயல் 3 அறிவியலால் ஆள்வோம்
என்ற பாடத்திற்கான செயல்பாடு. 
27.08.2024
---------------------------------
ஆறாம் வகுப்பு  
தமிழ் பாட செயல்பாடாக அறிவியல் முழக்கங்களை தனித்தனியாக பதாகையில் எழுதி வர பணிந்திருந்தேன். 

மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து இன்று ஆர்வமுடன் ஒவ்வொரு மாணவரும் 
அவர்களுக்குத் தெரிந்த அறிவியல் முழக்கங்களை அவர்கள் கையெழுத்தில் அழகுற எழுதி வந்திருந்தனர். 

வரிசையாக வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்றேன். 

பள்ளி வளாகத்தில் அந்த பதாகையை ஏந்தி அமர்ந்திருந்தனர். 

எங்கள் பள்ளியின் ஆற்றுப்படுத்துநர்
அருட்தந்தை எலியாஸ் சே.ச.
அவர்களை அழைத்து 
மாணவர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் உரையாற்ற வேண்டும் என்று கூறியதும்...
'எதைப் பற்றி 'என்று கேட்டார்? 
"வாருங்கள் எங்கள் மாணவர்களைப் பார்த்தவுடன் உங்களுக்கு தெரியும் ...
எதைப் பற்றி பேச வேண்டும் என்று..." கூறி அழைத்துச் சென்றேன். 

ஆறாம் வகுப்பு மழலை மாறாத முகம்...
ஆனால் ஒவ்வொரு குழந்தைகள் கையில் பிடித்திருந்த பதாகையை அவர் வாசிக்கச் சொன்னார். 

"அறிவியல் மக்களுக்கே!" என்றார் ஒருவர்...
"என் வழி அறிவியல் வழி "என்றார் மற்றொருவர்.

"ஏன் என்று கேள்.."
இது மற்றொருவர்..

"அறிவியல் சிந்தனை கொள்! "

"ஆய்வில் மூழ்கு..."

"அறிவியலை ஆக்கத்திற்காகப் பயன்படுத்துவோம்..."

என்று வரிசையாக அவர்கள் அவர்களுக்கு உரிய தொனியில் 
முழங்க அருட்தந்தை முகத்தில் ஆனந்தம். 

அவரும் அறிவியல் குறித்து உரையாட தொடங்கினார். 

அறிவியல் என்பது சமூக மாற்றத்திற்கான 
கருவி. 
ஏன் ?எதற்கு? எப்படி? என்ற வினாக்கள் கேட்பதன் வாயிலாகவே அறிவியல் வளர்ச்சி அடைகிறது. இன்று ஏராளமான 
புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. 
நீங்களும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்களாக மாற வேண்டும்.

அத்துடன் 
உங்கள் வகுப்பிற்கு யாராவது மாணவர் ஒருவர் தொடர்ந்து வரவில்லை என்றால் அவர் ஏன் வரவில்லை? என்ற கேள்வியை எழுப்பி அதற்குத் தீர்வு காண முயல வேண்டும். 

எப்போதும் ஜாதி மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். 

ஏன் ஆப்பிள் மேலே செல்லாமல் கீழே விழுகின்றது? என்று கேட்டதால்தான் 
புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார். 
ஏன் பறவையைப் போல நம்மால் பறக்க முடியவில்லை? என்று கேட்டதால்தான் 
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர்.

அம்மா சமையல் செய்யும்போது 
பாத்திரத்தின் மூடி ஏன் வெளியே தள்ளிக் கொண்டே இருக்கின்றது.? 
அதற்கான சக்தி என்ன? 
என்று கேட்டதால்தான் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. 
எனவே நீங்களும் கேள்வி கேளுங்கள். 
உங்கள் ஆசிரியரிடம், உங்கள் பெற்றோரிடம், பெரியவர்களிடம், உங்கள் கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை கண்டறியும் போது நீங்களும் ஒரு விஞ்ஞானிகளாக உருவாகலாம். 
என்று அழகாக எடுத்துரைத்தார்.

மாணவர்கள் அனைவரும்  அறிவியல் முழக்க
பதாகையை  ஏந்தி
வளாகத்தில் முழக்கம் எழுப்பி வலம் வந்தனர். 

அறிவியலுக்காக அணிவகுத்து நின்றனர். 

இறுதியில் 
அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்! 

தமிழ் பாடம்தான்.
வெறும் A-4 தாளில்
செயல்பாடுகளை முடித்து விடாமல் 
அதனை அறிவியல் களச் செயல்பாடாக மாற்றி அனைத்து குழந்தைகளையும் அறிவியல் முழக்கம் எழுப்பி உறுதிமொழி எடுக்க வைத்தது சிறந்த செயல்பாடாக அமைந்தது. 

அனைவருடைய முகத்திலும் புன்னகை கலந்த நம்பிக்கையைக் காணும் போது நிச்சயம் இவர்கள் 
அறிவியலை   ஆள்வார்கள்...
அறிவியல் மனப்பான்மையுடன் 
வாழ்வார்கள்...
 என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
👍
--- ஜே.ஆ.டோமினிக் ராஜ்.
தமிழ் ஐயா.🤝

Wednesday, August 14, 2024

கார்மலில் 78 - ஆவது சுதந்திர தின விழா.

கார்மல் பள்ளியில் 78 -ஆவது சுதந்திர தின விழா. 
14.07.24.



நாகர்கோவில் ஆகஸ்ட் 14:
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டப்படது.
இறைவணக்க பாடல் பாட  ஆசிரியர் திரு சுஜின் அனைவரையும் வரவேற்றார்.


 மாணவர் அர்சத் அகமது சுதந்திர தின உரையாற்றினார். அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் திருமதி N.சுதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.


விடுதலைக்கு பாடுபட்ட பல்வேறு தலைவர்களை எடுத்துக் கூறி அவர்களது தியாகங்களால் தான் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. 
படித்தவர் படிக்காதவர் ஏழை பணக்காரர் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் விடுதலை வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஜாதி மதம் இனம் கடந்து இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழ நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். 
இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். 
மாணவர்கள் ஒழுக்கத்துடன் நல்ல கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். 
என்று தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். 



சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.


ஆசிரியர்கள் S. மெர்லின் மற்றும் J. ஆல்வின் ஆகியோர் சுதந்திர தின பாடல் பாடினார். 


மாணவர்களின் நடனம் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சுதந்திர தின உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன.
ஆசிரியர் அலுவலர் செயலர் திரு. ஜாண் பிரிட்டோ அவர்கள் முன்னிலை வகித்தார்.



பள்ளித் தலைமை ஆசிரியர் அருட்தந்தை S.மரிய பாஸ்டின் துரை சே.ச.
அவர்கள் தலைமை உரையாற்றினார்.

ஆசிரியர் திரு.S.ரெக்ஸ் நன்றி கூறினார். 

நாட்டுப்பண்ணுடன்
விழா நிறைவுற்றது. 
ஆசிரியர்கள் திரு ரெக்ஸ், திரு.வில்சன்,திரு.சுஜின்,திரு.பிரான்சிஸ்  சேகர்,திரு.ஜெகசீலன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.