Friday, July 22, 2022

லசாக் இயக்க தொடக்க விழா 2022..

கார்மல் பள்ளியில் லசாக் இயக்க அறிமுக விழா
19.07.2022.
-------------------------
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம்  தலைமை பண்பு மற்றும் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் லசாக்(LASAC) இயக்கத்தின் தொடக்க விழா கார்மல் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருட்தந்தை முனைவர் அமலதாஸ் சே.ச. அவர்கள் அனுமதியுடன் தலைமையாசிரியர் அருட்தந்தை .மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்களுடைய வழிகாட்டுதலின் பெயரில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்க தொடக்கவிழா நடைபெற்றது. லசாக் பொறுப்பாசிரியர் திரு.N.வெர்ஜின் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டனர். லசாக் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரர் ஜான் புஷ்பராஜ் சே.ச. அவர்கள் லசாக் இயக்கம் பற்றியும் ஆளுமைத் திறன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள் .
இணை ஒருங்கிணைப்பாளர் திரு ஆல்வின் சாம் நன்றி கூறினார்.


இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்...அதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் லசாக அமைப்புக்கு பாராட்டுகள்.

Friday, July 1, 2022

மனிதம் நெகிழ்ந்தது

*மனிதம் நெகிழ்ந்தது...*
--ஜே.ஆ.டோமினிக் ராஜ்

 பதிவு: நாள்:30.06.19, ஞாயிறு இரவு 11.00 மணி.
🌹

    சனிக்கிழமை இரவு நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநில பொதுக்குழு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நண்பர் Sivasree Ramesh அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி பயணிக்க....திருநெல்வேலியில் வந்ததும் அவரது முன் இருக்கையில் உள்ள நண்பர் அவசர அவசரமாக இறங்கிச் சென்றுள்ளார்...சிறிது நேரம் கழித்து பேருந்தில் ஏறிய அவர் தான் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் எதையோ தேடினார்...
பேருந்து கிளம்பத் தொடங்கியதும் மீண்டும் திருநெல்வேலியில் இறங்கி விட்டார்.
....
திருச்சிக்கு பேருந்து அதிகாலை 4.00 மணிக்கு வந்து சேர..சிவஸ்ரீ 
பேருந்தில் இருந்து இறங்க எழும்போது சீட்டி்ல் ஒரு பர்ஸ் இருப்பதைப் பார்த்தார்.அருகில் இருந்த நண்பரிடம் அதைக் காட்டி இது யாருடையது ? என வினவ அவரும் அது தன்னது இல்லை என்று கூறி விட.. பரஸ் உள்ளே திறந்து பார்க்க உள்ளே ஆதார் அட்டை,,வாக்காளர் அடையாள அட்டை,PAN கார்டு , ஓட்டுநர் உரிமை அட்டை, மூன்று ATM கார்டுகள், ஐநூறு ரூபா நோட்டு,நூறு ருபா ,இருநூறு ரூபா நோட்டு இவற்றுடன் இரண்டு பென் டிரைவ்,ஒரு ஐந்து பவுன் தங்கச் சங்கிலி இருந்துள்ளன. இதைப் பார்த்ததும் இவருடைய தூக்கம் போய்விட்டது. இவ்வளவு ஆவணங்கள் இருந்தும்...அவருடைய தொடர்பு எண் ஏதுமில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.ஆதாரில் ஒரு முகவரியும், வாக்காளர் அடையாள அட்டையி்ல்,ஓட்டுநர் உரிமை 
அட்டையில் ஒரு முகவரியும் இருக்க...இவர் குழப்பத்தில் அதில் ஒரு சோதிடர் முகவரி இருக்க அதனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அவரும் அந்த பெயரில் தனக்கு யாரும் தெரியல என்று கூறிவிட என்னிடம் விசயத்தைப் பகிர்ந்து கொண்டார்.ஆதாரில் உள்ள முகவரிக்கு மாலை போய் பார்ப்போம் என்று கூறி தஞ்சையில் பொதுக்குழு முடிந்ததும் திருச்சி வந்து மதுரையை அடைய இரவு 8.00 மணி ஆனது...
    ஆதாரில் கூறியுள்ள முகவரிக்கு பேருந்தில் ஏறினோம்.த.விவேக்,
த/பெ. தங்கவேலுச்சாமி, G-o1 K
Block,  அனிருத் வசந்தரா அப்பார்ட்மென்ட், ஆண்டாள்புரம் என்ற முகவரியை தேடிப் பயணித்தோம்....
 அந்த எண் உள்ள வீட்டில் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தோம்.

நண்பர் சிவஸ்ரீ ரமேஷ் சொல்லுவார்.. "பேசாம ஊருக்குப் போய் ஒரு கடிதம் போட்டு அவருக்குத் தெரிவித்து இருக்கலாம்" என்றார்.

நான் " இங்கு உள்ள காவலர்கள் யாருக்கும் இந்த பெயர் தெரியல... இந்த இடத்தில் உள்ள காய்கறி கடைக் காரரிடம் விவேக் தெரியுமா என்றால் தெரியாது என்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கும் இப்பகுதியில் தற்போது அவர் இருக்கின்றாரா? அல்லது வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டாரா ?
என்பதே தெரியல... கொஞ்சம் பொறுங்க பார்க்கலாம் " என்று கூறி காத்திருந்தோம். 

அந்த கதவில்
"Jesus Save Us" என்று ஒட்டப்பட்டுள்ளது.எனவே உள்ளே விவேக் இருக்க வாய்ப்பில்லை என்று நான் கூறும்போதே கதவைத் திறந்து ஒரு 40 வயது மதிக்கத்தக்கவர் வந்தார். 

"ஐயா உங்க பெயர் விவேக்கா?"  என்று கேட்டேன். 
"இல்லை சார்.நான் வேற. அப்படி யாரும் இங்கே இல்லை"  என்றார். "இல்லை ஐயா ...இதோ பாருங்க இந்த ஆதார் அட்டையில் இந்த முகவரி. தான் உள்ளது.
ஒருவேளை நீங்க இங்கு வரும் முன்பு யாரும் இருந்து இருக்கலாம்.யோசித்துப்பாருங்க என்று கூற...சாரி சார்.நாங்க வந்து சிக்ஸ் மந்த் தான் ஆகின்றது " என்றார்.

அவருக்கு எங்கள் மேல் ஐயப்பாடு இருந்திருக்கும் என்பதை உணர்ந்து சிவஸ்ரீ சார்...விவரத்தை கூறினார்.
"சார் இந்த பர்ஸ்சை அவரிடம் ஒப்படைக்கனும் . அதுதான் சார்.யோசித்துப் பாருங்க....என்று கூறினார்.
" ஐயா அவருடைய பெயரில் கடிதம் ஏதும் வந்து இருக்கலாம்...அப்படி ஏதாவது?... என்று கூற உடனே அவரும் , 

"ஆம் சார்..கடிதம் வரும்.
நான் அப்படியே  வெளியே வைத்து இருப்பேன்..." என்றார்.


"சார் தற்போது அப்படி வந்த கடிதம் உள்ளதா என்று பாருங்க.."என்று நான்  கூற வீட்னினுள் சென்று "இதோ ஒரு கடிதம் உள்ளது" என்றார்.Anna University Research Centre இலிருந்து வந்த கடிதத்தில் விவேக்குடைய அலைபேசி எண் இருந்தது. மகிழ்வுடன் அதில் தொடர்பு கொண்டதும் கொஞ்ச நேரம் பிஸி என்று வந்தது...
பின்பு தொடர் முயற்சிக்குப் பின்
" அலோ"
என்ற குரல்...
சார் நீங்க விவேக்கா?
என்றேன்.
"ஆம் சார்...நீங்க?"
"நான் டோமினிக்!....
உங்க ஆதார் அட்டை கிடைத்துள்ளது. ..."
என்று கூறவும்...
சார் உங்க கிட்டயா இருக்கு?
நீங்க எங்க சார் இருக்கீங்க?
ரெம்ப நன்றி சார்...எனக்கு ஒரே அழுகையா இருந்தது. நேற்று தூங்கவே இல்லை சார்...நீங்க எங்க சார் இருக்கீங்க?" என்று பட பட வென பேசினார்.

சார் நாங்க உங்க ஆதார் முகவரியில் உள்ள ஆண்டாள்புரம்
அனிருத் அப்பார்ட்மென்டில் உள்ளோம்" என்றேன்.

  சார் அங்கேயே இருங்க நான் சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு டிராவல்ஸ்ல வந்துகொண்டு இருக்கின்றேன். அங்கே இறங்கி விடுகின்றேன் என்றார். சார்...நாங்க திருமங்கலம் வந்து விடுகின்றோம்.நீங்க வாங்க...
என்று கூறிவிட்டு ஆண்டாள்புரம் பேருந்து நிலையம் சென்று அங்குள்ள "வெண்மணி" சிற்றுண்டி மையத்தில் இரவு உணவை முடித்து திருமங்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம்.

இரவு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தார் விவேக்...
"சார் " என்று கூறி காலை தொட்டுக்கும்பிடப் பணிந்தவரைத் தடுத்தேன். 
   "சார் நான் எங்கே கிடைக்கப்போகின்றது என நினைத்தேன்? இந்தக் காலத்தில இது எல்லாம் நடக்கின்ற கதையா என என் நண்பர்கள் எல்லோரும் கூறினர்.திருநெல்வேலி யில் இறங்கியபோது என் கையில் ₹52 தான் இருந்தது. அதனை வைத்து சங்கரன் கோவில் சென்றடைந்தேன்.
மனசுக்கு கஷ்டமாக இருந்தது.. அழுகையாகவும் இருந்தது...
நீங்கள் போன் செய்ததும் தான் இப்போதும் உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்று என் நண்பர்களோட பகிர்ந்துகொண்டேன்...ரெம்ப 
நன்றி சார்...அந்த பென்டிரைவ்ல என்னோட profile இருந்தது..."
என்று கூறினார்.
     அவர் ஒரு உதவிப்பேராசிரியராகப் பணி புரிவதாக கூறினார்.நாங்க இருவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் என்று எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்...
    இந்த மகிழ்வால் அவர் சென்னைக்கு நாளை செல்வதாக கூறி மீண்டும் சங்கரன் கோவில் செல்ல இருப்பதாக கூறினார்.
  "சார் ஒரு உதவி செய்யனும.?
ஒரு 30 ரூபா தரமுடியுமா?" 
என்றளன். 
என்னசார் நீங்க செய்த உதவிக்கு எவ்வளவு ரூபா கொடுத்தாலும் தகும்.என்ன உதவியும் செய்யத் தயாராக இருக்கின்றேன்" என்றார்.
      இல்லை சார் எங்களுக்கு ₹30 ம் உங்க முகவரியும் போதும்.நீங்களும் தமிழ்நாடு அறிவியல். இயக்க உறுப்பினராக சேர்ந்து அறிவியல் செய்பாட்டாளராக பயணிக்கனும் "
என்றோம்.
" நிச்சயமாக சார்!" என்று கண்ணில் மகிழ்ச்சி ஒளி பொங்க கூறினார்..ஒரு செல்பி எடுத்துக் கொண்டோம்.எங்கள்
நட்பு தொடர்ந்து பயணிக்கும்.

இரவு 3.00 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது வரை நெடுநேரம் இந்த நினைவுகள் எங்களை தூங்காமல்  உரையாடிக்கொண்டு வரக்காரணமாயின...
நிம்மதி. 
காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தால் கூட அவருக்கு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகம் தான் சார்.நீங்க வந்ததால் இந்த முயற்சி வெற்றியாக முடிந்தது என்று சிவஸ்ரீ கூற " உண்மை கிடைக்கும் வரை தொடர்ந்து
தேடுவதுதானே அறிவியல்...
இதோ இது அறிவியலின் வெற்றி!"
என்றேன்.
சிறந்த வாழ்வியல் அனுபவம்.


--ஜே.ஆ.டோமினிக் ராஜ்
TNSF மாவட்டச்  செயலாளர்
குமரிமாவட்டம்