Saturday, April 27, 2024

டோனியின் சோகத்தை தீர்த்து வைப்பது எப்படி?

கொரோனா கால கொடுமை


அவன் புதிதாக பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்திருந்தான்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பிப்ரவரியில் பள்ளி திறக்கப்பட்டபோது
முதல் வரிசையில் அமர்ந்திருந்தான்.


முதல் வகுப்பு என்பதால் 
அனைத்து மாணவர்களையும் சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டினேன்.

இவன் முறை வரும்போது 
தன் பெயரை அறிமுகம் செய்துவிட்டு
தந்தை பற்றி கூறும் போது கொஞ்சம் தடுமாறினான்.

நான் கொஞ்சம்  கால அவகாசம் எடுத்துக்கொண்டு பேச கூறினேன்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தன.

ஏதே சிக்கல் உள்ளது என்பதை 
உணர்ந்து கொண்டு

வகுப்பு முடிந்ததும் அவனோடு வளாகத்தில் நடந்து கொண்டே அவன் அப்பாவைப் பற்றி 
கேட்டேன்.

"சார் எங்க அப்பா
பாம்பு கடிச்சு இறந்து போயிட்டாங்க சார்" என்றான்.

எப்போது டா? என்றேன்.

"கடந்த ஜூன் மாதம் சார்." என்றான்.

எப்படிடா? என்று கேட்க

சார் இரவு 12 மணிக்கு வீட்டு தின்னையில் தூங்கிய போது பாம்பு கடித்துவிட்டது.

"உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாத்தி இருக்கலாமே?"என்று நான் கூற..

" சார்...ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனோம்.
கொரோனா டயம் என்பதால் உடனே பார்க்கல...
கொஞ்ச நேரம் அலைக்கழித்தாங்க...
அப்புறம் உள்ளே அனுமதித்தாங்க...
நர்சு தான் சார் வந்து கவனிச்சாங்க.
ஊசி போட்டதும் தூங்க கூடாதாம்.
எங்க அப்பா தூங்கி விட்டதாம்.
அதனால் காலையில் அவர் இறந்துவிட்டாரு சார்"
என்று கண்களில் நீர் வழிய கூறினான்.

இந்த பள்ளி பிடித்திருக்கா?
விடுதி பிடிச்சு இருக்கா?
என்று விசாரித்தேன்.

"ம்...அப்பா இல்லல்லா சார்.
அதனால் ஒரு சாரிடம் கேட்டு அம்மா இங்கே வந்து சேர்த்து விட்டாங்க"
என்றான் வெள்ளந்தியாக...
நன்றாக படிக்கும் மாணவன்.

வருவாய் ஈட்டும் தாய் தந்தை யாராவது இறந்துவிட்டால் அரசு ₹75 ஆயிரம் உதவி செய்யும்.அதற்கு விண்ணப்பித்துள்ளாயா?
என கேட்டேன். அது தெரியாது சார்.
என்றான்.
சரி அம்மாவிடம் கேட்டுக் கூறு என்றேன்.
அதற்குள் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதும் ஊருக்குச் சென்றுவிட்டான்.

அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான்.
அப்பாவின் இறப்புச் சான்று, வாரிசு சான்று,முதல் தகவல் அறிக்கை, உடற்கூராய்வு சான்று,ஆகியவற்றின் நகலை அனுப்பி வைத்தான்.

தற்போது பயிற்சி ஏடு வாங்க வந்திருந்தான்.
 
"சார் அந்த விண்ணப்பத்தை அனுப்பிச்சாச்சா சார்?" என கேட்க..
அலுவலகத்தில் பாம்பு கடித்தால் அந்த உதவியை பெற முடியாதாம் என்று கூற...
வேணா நீங்க கலைக்டர் ஆபீஸ்ல விசாரியுங்க சார் என்று கூறினர்.

அவனை அழைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன்.

சார் அது சமூக நலத்துறை சார்ந்ததாக இருக்கலாம் நீங்க அங்கே புதிய கட்டடத்தில் போய் விசாரியுங்கள் என்றனர்.
அங்கே சென்றபோது இது எங்களுக்குக் கீழ் வராது...
மூனாவது மாடியில் குழந்தைகள் நலத்துறை இருக்கு அங்கு கேளுங்க என்றனர்.

மூனாவது மாடிக்கு சென்று..
அங்கே விசாரித்தால் ஒரு பெண்மணி...மனுவை வங்கிப் பார்த்துவிட்டு..
"சார் இது எஜூகேசன் டிப்பார்ட் மெண்ட் விசயம்.நீங்க அங்கே போய் விசாரியுங்க" என்று கூற...
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சென்றேன்.

"சார் அந்த செக்சன் வரவில்லையே?"
என்ற பதில் வர..
அலுவலக முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி விவரத்தைக் கூறினேன்.

சார் சாலை விபத்து மரணங்களுக்கு மட்டும் தான் அளித்து வருகின்றோம் என்றார்.
நானும்...
"சார் பாம்புகடியும் ஓரு விபத்துதான் சார்.
அதற்கான சான்று எல்லாம் உள்ளது சார்" என்றேன்.

சரி அப்போ ஒன்னு செய்யுங்க...
தாசில்தாரிடம் சென்று
"பாம்பு கடி விபத்தினால் மரணமடைந்தார்"
என்று ஒரு சான்று வாங்கி வாருங்க அனுப்பி விடலாம் என்று கூறினார்.
அந்த மாணவரிடம் கூற..
"சரிங்க சார்"
என்று கூறி பேருந்தில் ஏறிச் சென்றான்.
ஒரு உதவிக்காக எத்தனை கதவுகளை தட்ட வேண்டி உள்ளது.
தட்டிக்களிக்க ஏராளமான காரணம் சொல்லும் சமூகம் பெற்றுத்தர உருப்படியா ஒரு காரணத்தைக் கூற முடியாதது வேதனையே.

Friday, February 23, 2024

காந்தி சார் நினைவுகள் 1

காந்தி சார் நினைவுகள்...1
______________________
23.02.24.
கொடைக்கானல் செண்பகனூர்
தோட்டத்தில் அவரது தந்தையின் தந்தை (தாத்தா)பணி செய்ததால் அருட்தந்தையரின் போதனைகளை கேட்டு..
கிறிஸ்தவ மதத்தை தழுவுகின்றார்.
அதனால் அவர் தந்தைக்கு
சாந்தப்ப தேவர்
பெயர் இடப்படுகிறது.
அவரது சகோதரர்கள் சகோதரிகள் அனைவரும் கிறிஸ்தவ பெயரே.மூன்றாம் 
தலைமுறையான
இவரது குழந்தைகளுக்கு மாப்பிள்ளை 
தேடும்போது..
கிறிஸ்தவ மாப்பிளை கிடைக்கவில்லை.
எனவே கிறிஸ்தவ பெயர் தாங்கிய இரு குழந்தைகளையும்
இந்து சமய கடங்கில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலை.
இரு மருமகன்களும் மகன்கள் போலவே அவரது குடும்பத்தை கவனித்துக் கொள்கின்றனர்.
இளைய மகன் சார் இங்கே பணியாற்றும் போது உடல் நல குறைவு காரணமாக காலம் ஆகிவிட்டார்.
அவரது அடக்கத்திற்கும் நாம் சென்று வந்தோம்.
மூத்த மகன் தயா
ஒரு மாற்றுத்திறனாளி.
அவருக்காக வீட்டில் ஒரு கடை வைத்து கொடுத்து அதனை கவனித்து வந்தார் ‌.
அவருக்கு கிறிஸ்தவ மதத்தில் தான் எடுக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் ஒரு பெண் பார்த்து கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து வைத்ததார்.
2001 இல் நடைபெற்ற அந்த திருமணத்திற்கும் நம் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர்கள் சென்று வந்தோம்.
கடந்த ஏழு  ஆண்டுகளுக்கு முன்பு மகனும் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
பணி நிறைவு பெற்றவுடன் தேனியில் உள்ள ஆலயத்தில் காலையில் இன்று ஹார்மோனியம் இசை அங்குள்ள குழந்தைகளுக்கும் இசையை கற்றுக் கொடுப்பதில் நேரத்தை செலவு செய்து வந்தவர்.

தந்தை வில்லியம் அல்போன்ஸ் சே.ச. அவர்கள் இருக்கும்போது ஆசிரியர் அவர்களது வீட்டிற்கு சென்று ஜெபிப்பது வழக்கம்.

மகன் பிறந்த பின்பு அவருக்கு உடல் நலத்தில் குறைவு ஏற்பட
அதிகம் பயணம் செய்ய இயலாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு டைரியில் அனைத்து நண்பர்களுடைய அலைபேசி எண்களையும் எழுதி வைத்து நினைவு வரும் போதெல்லாம் அவர்களோடு உரையாடுவது அவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
எப்போதெல்லாம் போன் செய்யும் போது " என்னப்பா எங்கள எல்லாம் மறந்துட்டீங்களா?"
என்று கேட்டு அனைத்து நண்பர்களும் விசாரிப்பார்.
குழந்தைகளை குடும்ப
உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிப்பது வழக்கம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக...
கார்மல் பள்ளி எவ்வாறு இருக்கின்றது?
சேவியர் எல்லாம் எவ்வாறு இருக்கின்றது என்று கேட்க ஒருபோதும் மறந்ததில்லை.

'என்ன சார் கார்மல் பற்றியே கேட்கின்றீர்கள்?' என்று கேட்டால்...

'என்ன செய்றது தம்பி...
நான் என் குடும்பத்தாரோடு வாழ்ந்த காலத்தை விட கார்மலில் வாழ்ந்த காலம்தான் அதிகம்..'
என்று பதில் கூறுவர்.

1998 ஆம் ஆண்டு
மார்ச் 18 ஆம் நாள்
நான் கார்மல் பள்ளியில் அடியெடுத்து வைத்த போது...
வெளிமாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற நிலையில் கொஞ்சம் விலகியே இருக்க வேண்டிய சூழல்...
அப்போதெல்லாம் என்னை செம்புலப் பெயல் நீர் போல்
தன்னுள் கலக்கச் செய்தவர்.
நான் இருதயராஜ் சார் பிரின்ஸ் சார் ஜோ
அதன் பின்பு வந்து சேர்ந்த பிரபாகர் ஞானசீலன் சார்
திண்டுக்கல் ஜாண் டி பிரிட்டோ.. என்று ஒரு நட்பு வட்டாரங்கள் அவருடன் கதை பேசிக் கொண்டிருக்கும்.

எங்களுக்கு முன்பு கஷ்மீர் சார், சந்தானம் சார், தர்மராஜ் சார், மார்சலின்
இவர்களுடன் 
அமலதாஸ் தந்தை என்று
ஒரு நட்பு வட்டம்...

அனைத்தும் பசுமை நினைவுகள்.



இன்று மீளா உறக்கத்தில் துயில் கொண்ட நண்பரை காண அந்த நட்பு வட்டங்கள்
சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.
அப்போது கூட அவரது உதடு "என்ன தர்மா நலமா?"
"என்ன தோமி இப்பதான் நேரம் கிடைத்ததா?"
என்று கேட்பது போல இருந்தது.

சந்தானம் சார் பற்றி அடிக்கடி கூறுவார்.
அவரது டிரஸ் கோடு பற்றி
பெருமையாக கூறுவார்.

திரு. இருதயராஜ் ஆசிரியரால் விட முடியாத பழக்கம் புகை பிடித்தல்.

தொடர்ச்சியாக புகை பிடிப்பது.
காலையில் எழுந்தவுடன் பள்ளி முன் உள்ள முத்து டீ கடையில் ஒரு குவளை தேனீருடன் ஆரம்பமாகும் புகை ...
இரவு உணவு முடித்ததும்
அறையில் வந்து டேபிள் விளக்கின் முன் மறுநாள் வகுப்பிற்கு தேவையான பாட குறிப்புகளை தயார் செய்து உரையாடும் போது
நிறைவடையும்.

இன்று அவர் மறைந்த போது அவருக்கு விருப்பமான அந்த சிகிரெட்டை மாலையாக கோர்த்து அணிந்து இருந்தனர்.

காலம் முழுவதும் கடவுளுக்காக பாடல் இசை ஊழியம் செய்த அந்த காந்தி சார்
இந்து மத சடங்கில் தான் அடக்கம் செய்யப்பட்டார்.
அருட்தந்தை அமலதாஸ் சேவியர் அவர்கள் இறுதி ஜெபம் நடைபெற்றது
அவர்களது குழந்தைகளுக்கும் துணைவியாருக்கும் கொஞ்சம் ஆறுதல்.
    மதம் என்பது வெறும் அடையாளம் தான்... அதனையும் தாண்டி மனித நேயப் பயணம் ஒன்று உள்ளது....

----நினைவுகள் பேசும்

Friday, March 17, 2023

இடைநிற்றலை தவிர்க்கும் முயற்சியில்....


இடைநிற்றலை தவிர்ப்போம்!
--ஜே.ஆ.டோமினிக் ராஜ்
17.03.23, வெள்ளிக்கிழமை.
---------

முகேஷ் வருண்...
ஆறாம் வகுப்பு படிக்கும் எனது வகுப்பு மாணவர்.
இந்த மாதம் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை..
அலைபேசியில் தொடர்பு கொண்டு
தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவே கூறியது.
சரி வீட்டில் சென்று பார்த்து வரலாம்
என்று நேற்று மாலை அவனது இல்லத்திற்கு சென்றோம்.
வீட்டில் யாரும் இல்லை.
இவர் மட்டும் எங்களைப் பார்த்த பின்பு
மாடியில் உள்ள அவரது வீட்டின் புற வாசல் வழியாக
வெளியில் சென்று மொட்டை  மாடிக்குச் சென்றுள்ளார். 
அவன் தங்கை கூறியதன் அடிப்படையில்
நாங்கள் மாடிக்கு சென்று பார்த்த போது
அங்கும் காணவில்லை.
அடுத்த மாடிக்கு தாவி
கில்லி விஜய்  ... 
போல
ஓடி இருப்பான் போல் தெரிகிறது.
சரி நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று 
இன்று மதியம் அவனை சந்திக்க சென்றேன்.
ஐயா திங்கள்கிழமை பள்ளிக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார்.
எவ்வளவோ வற்புறுத்தியதற்கு பின்பும்
கீறல் விழுந்த ரிக்கார்டை போல
அதனையே கூறிக் கொண்டிருந்ததால்
கோபத்தில் ஒரு அடி கொடுத்து விட்டு
பள்ளிக்கு வந்து விட்டேன்.
மனசு எல்லாம் முகேஷ் வருணாக வந்து நின்றான்
வகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை.
அவன் பாட்டிக்கு   போன் செய்தேன்.

சார் ஜெப்ரி என்ற பையன்
பள்ளிக்கு வந்தால் முகேஷை
அடிப்பதாக கூறியிருக்கிறான்.
அதனால் தான் இவன் பள்ளி வர பயப்படுகின்றான்
என்று கூறினார்.
வகுப்பில் ஜெப்ரியுடன் பேசினேன்.

ஐயா நான் அப்படி எதுவுமே கூறவில்லை
என்று அவன் கூற...
சரி இன்று மாலை முகேஷ் வருணைப்  பார்க்கச் செல்லலாம்...
யாரெல்லாம் வருகிறார் ?
என்று கேட்க...
சரவணன், அருள்குமரன், ஜெப்ரி, ஆரோன், ஆன்றோ  ஜினோ.. என ஒரு 
படையே அணிவகுத்து வந்தது.

கார்மல் கேண்டியனிலிருந்து..
பலகாரங்களுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்தோம்.

ஐயா நேற்று நீங்கள் வந்திருப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.
வேறு ஆசிரியர்  வந்துள்ளார் என்று நினைத்து தான் ஓடினேன்..
என்று முகேஷ் கூறினார்.

ஒரு மணி நேரம் அவனுடன் உரையாடினோம்.
தந்தை இல்லாத குடும்பம்.
தாய் காலையிலேயே ஒரு கடைக்கு வேலைக்கு சென்று 
இரவு தான் வீடு திரும்புவார்.
அம்மாச்சி, தாத்தா 
தான் இவனை கவனித்துக் கொள்கின்றனர்.
அம்மாச்சி வீட்டு வேலைக்குச் சென்று விடுவதால்
முகேஷ்  வீட்டில் டிவியுடன்
நேரத்தை கழித்துக் கொண்டிருப்பதும்...
பிடிவாதமாக இருப்பதும்....
பள்ளி செல்ல இயலாமைக்கான 
காரணங்களை உருவாக்கிக் கொள்வதுமாக 
என்று இருந்துள்ளார்.
அவன் தாத்தா செல்லப்பா சிறந்த ஒரு
ஓவியர்,
பாட்டி மல்லிகா சிறந்த
சமையல் கலைஞர்.


தொடர்ந்து இவனை கண்காணிக்காமல் விட்டிருந்தால்
இவனும் பள்ளியை விட்டு
விலகி இருந்திருப்பான்.
நம் வகுப்பில் இதுபோன்ற மாணவர்கள்
உருவாகி இருக்கக் கூடாது என்பதற்கான சிறு முயற்சி.

தமிழ் வழி மாணவர்கள் என்பதால்
சக மாணவர்களை அழைத்து வருவதற்கு மற்ற மாணவர்களும்
உடன் வந்தனர்.


ஐந்தாம் வகுப்பு படிக்கும்
முகேஸ்வரூனின் தம்பி
செல்வ வருண்...
^ ஐயா அடுத்த வருஷம்
உங்க பள்ளியில் தான் வந்து சேரப் போகிறேன் ' என்றார்.
வாடா செல்லம் என்று அவனை வரவேற்று, மல்லிகா பாட்டி தந்த
மண மணக்கும் காப்பியை பருகி விடைபெற்றோம்.


வெள்ளிக் கிழமை
ஊரெல்லாம் சிலுவைப் பாதை...
நாங்கள் உருவாக்குவது
புதிய பாதை.

Sunday, December 4, 2022

கார்மல் பள்ளி NCC மாணவர்கள் கடற்கரையை தூய்மை செய்யும் செயல்பாடு

கடற்கரை தூய்மை பணியில் கார்மல் பள்ளி என. சி. சி. மாணவர்கள்.
_____________________
நாகர்கோவில் டிச. 04:
சர்வதேச கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மைய அரசின் சார்பில் தேசிய மாணவர்
 படையினருக்கு  
" புனித் சாகர் அபியான்" என்ற பெயரில் “தூய்மையான கடற்கரை - நெகிழி குப்பைகள் இல்லா கடல்” என்ற தலைப்பில் கடற்கரைதூய்மைப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கார்மல் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே. ச. அவர்கள் வழிகாட்டுதலில் என்.சி.சி இயக்குனர் அருள்ராஜன் அவர்கள் நூறு என்.சி.சி.மாணவர்களை அழைத்துக் கொண்டு மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் உள்ள சுற்றுலா தலமான சங்குத்துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கார்மல் பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ரெக்ஸ் அனைவரையும் வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லெஸ்லி , கார்மல் பள்ளி உதவித் தலைமையாசிரியர் அருட்தந்தை யேசு நேசம் சே. ச.ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் டோமினிக்ராஜ் கடற்கரையின் தூய்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
 அறிவியல இயக்கத்தின் ராஜாக்கமங்கல ஒன்றிய தலைவர் தாமோதரன் மாணவர்களுக்கு நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து எளிய செயல்பாடுகள் மூலம் எடுத்துரைத்தார். பின்பு மாணவர்கள் கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து உரிய குப்பை தொட்டிகளில் போட்டனர். 
நிகழ்வில் ஆசிரியர் மகிபன், புத்தன்துறை பங்கு பேரவை உறுப்பினர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். என். சி. சி. இயக்குனர் அருள்ராஜன் நன்றி கூறினார்.

Friday, December 2, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கார்மல் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு.

வாழ்த்துகள் கார்மல் பள்ளி இளம் விஞ்ஞானிகளே!
🌹🌹

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
இந்திய அறிவியல் தொழில்நுட்ப குழுமம் இணைந்து நடத்தும் 30- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு,  நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அனுமதியுடன் ஆசிரியர் திரு. இஞ்ஞாசி ராஜா அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் அஸ்வின் லிபின், அஸான் ரோசிக் சைன் ஆகியோர்,  "நாகர்கோவில் பகுதிகளில் மறைக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் அதனை  மாணவர்களிடம் எடுத்துச் செல்லுதலும்" என்ற தலைப்பிலும்
ஆசிரியர் திரு.சந்தியாகு அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் பிரின்ஸ் நிகிலன், டேனிஷ் புருனோ ஆகியோர் " பள்ளி , மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை " என்ற  தலைப்பிலும், ஆசிரியர்  பிரிசிலிட்டி வழிகாட்டலில் மாணவர் விஷ்ணு  " நீர் சிக்கன முறையில் மூலிகைகள் மற்றும்  கீரைகள் வளர்ப்போம் பயனறிவோம்"  என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இதில் பிரின்ஸ் நிகிலன் தலைமையில் தயாரித்த   "பள்ளி மருத்துவமனை வழிபாட்டு தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை"  என்ற ஆய்வறிக்கை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் கோவில்பட்டியில் டிசம்பர் 10,11 ஆகிய நாட்களில்  நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களையும் காட்டி ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் , தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் அலுவலர் செயலாளர்  திரு. பபிலன் ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டினர்.
🤝தமிழ் முரசு செய்தி. 

Friday, October 28, 2022

கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா அறிவியல் கண்காட்சி. 28.10.2022

கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா அறிவியல் கண்காட்சி
28.10.2022.
-----------------------
நாகர்கோவில் அக்.: 28
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ,ஆசிரியர் திரு. பினு மோன்  அனைவரையும் வரவேற்றார். அறிவியல் கண்காட்சியின் தொடக்க நிகழ்வாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்மல் பள்ளியின் தாளாளரும் இல்ல அதிபருமான  அருட்திரு.ஜெரோம் சே.ச அவர்கள் ஆசியுரை வழங்கினார்.

 கார்மல் பள்ளியின் மேனாள் உதவித் தலைமை ஆசிரியர் திரு. ஜெரோம் சேவியர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம், " அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும் , மாணவப் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; விஞ்ஞானிகள் எல்லாம் சிறுவயதில் கேள்வி கேட்டு அறிவை  வளர்த்திருந்தனர். அது போல மாணவர்களும் கேள்வி கேட்டுப் பழக வேண்டும். அதுதான் அறிவின் தொடக்கம்.' என்று சிறப்புரையாற்றினார். பள்ளித்தலைமை ஆசிரியர் அருட்திரு மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்கள் தலைமை உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் அருட்திரு.ஜேசு  நேசம் சே.ச,  அவர்கள் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தும்  முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


கூடுதல் உதவித்தலைமையாசிரியர்கள் திரு.ஜெரோம், திரு.ஜாண் உபால்டு,திரு.அமல்ராஜ், ஆசிரியர் அலுவலர் செயலர் திரு.பபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கார்மல் அறிவியல் கழகத்தின் தலைவர் திரு.பாபு சைமன் ராஜ் நன்றி கூறினார் .ஆசிரியர் திரு. டைட்டஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பின்பு மாணவர்களுடைய அறிவியல் படைப்பாற்றல் வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை திரு.ஜெரோம் சேவியர் அவர்கள் தொடக்கி வைத்தார்.

நாகர்கோவில் திருச்சிலுவைக்  கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் அருட் சகோதரி முனைவர்.செபாஸ்டின் அம்மாள் ,  முனைவர் லெஸ்லி பாத்திமா ,ஜெரோம் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரதி ஆகியோர் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சிக்கு கார்மல் பள்ளியில் செயல்படும் கார்மல் அறிவியல் கழக பொறுப்பு ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Friday, July 22, 2022

லசாக் இயக்க தொடக்க விழா 2022..

கார்மல் பள்ளியில் லசாக் இயக்க அறிமுக விழா
19.07.2022.
-------------------------
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம்  தலைமை பண்பு மற்றும் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் லசாக்(LASAC) இயக்கத்தின் தொடக்க விழா கார்மல் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருட்தந்தை முனைவர் அமலதாஸ் சே.ச. அவர்கள் அனுமதியுடன் தலைமையாசிரியர் அருட்தந்தை .மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்களுடைய வழிகாட்டுதலின் பெயரில் கார்மல் பள்ளியில் லசாக் இயக்க தொடக்கவிழா நடைபெற்றது. லசாக் பொறுப்பாசிரியர் திரு.N.வெர்ஜின் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டனர். லசாக் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரர் ஜான் புஷ்பராஜ் சே.ச. அவர்கள் லசாக் இயக்கம் பற்றியும் ஆளுமைத் திறன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள் .
இணை ஒருங்கிணைப்பாளர் திரு ஆல்வின் சாம் நன்றி கூறினார்.


இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்...அதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் லசாக அமைப்புக்கு பாராட்டுகள்.