Saturday, April 27, 2024

டோனியின் சோகத்தை தீர்த்து வைப்பது எப்படி?

கொரோனா கால கொடுமை


அவன் புதிதாக பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்திருந்தான்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பிப்ரவரியில் பள்ளி திறக்கப்பட்டபோது
முதல் வரிசையில் அமர்ந்திருந்தான்.


முதல் வகுப்பு என்பதால் 
அனைத்து மாணவர்களையும் சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டினேன்.

இவன் முறை வரும்போது 
தன் பெயரை அறிமுகம் செய்துவிட்டு
தந்தை பற்றி கூறும் போது கொஞ்சம் தடுமாறினான்.

நான் கொஞ்சம்  கால அவகாசம் எடுத்துக்கொண்டு பேச கூறினேன்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தன.

ஏதே சிக்கல் உள்ளது என்பதை 
உணர்ந்து கொண்டு

வகுப்பு முடிந்ததும் அவனோடு வளாகத்தில் நடந்து கொண்டே அவன் அப்பாவைப் பற்றி 
கேட்டேன்.

"சார் எங்க அப்பா
பாம்பு கடிச்சு இறந்து போயிட்டாங்க சார்" என்றான்.

எப்போது டா? என்றேன்.

"கடந்த ஜூன் மாதம் சார்." என்றான்.

எப்படிடா? என்று கேட்க

சார் இரவு 12 மணிக்கு வீட்டு தின்னையில் தூங்கிய போது பாம்பு கடித்துவிட்டது.

"உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாத்தி இருக்கலாமே?"என்று நான் கூற..

" சார்...ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனோம்.
கொரோனா டயம் என்பதால் உடனே பார்க்கல...
கொஞ்ச நேரம் அலைக்கழித்தாங்க...
அப்புறம் உள்ளே அனுமதித்தாங்க...
நர்சு தான் சார் வந்து கவனிச்சாங்க.
ஊசி போட்டதும் தூங்க கூடாதாம்.
எங்க அப்பா தூங்கி விட்டதாம்.
அதனால் காலையில் அவர் இறந்துவிட்டாரு சார்"
என்று கண்களில் நீர் வழிய கூறினான்.

இந்த பள்ளி பிடித்திருக்கா?
விடுதி பிடிச்சு இருக்கா?
என்று விசாரித்தேன்.

"ம்...அப்பா இல்லல்லா சார்.
அதனால் ஒரு சாரிடம் கேட்டு அம்மா இங்கே வந்து சேர்த்து விட்டாங்க"
என்றான் வெள்ளந்தியாக...
நன்றாக படிக்கும் மாணவன்.

வருவாய் ஈட்டும் தாய் தந்தை யாராவது இறந்துவிட்டால் அரசு ₹75 ஆயிரம் உதவி செய்யும்.அதற்கு விண்ணப்பித்துள்ளாயா?
என கேட்டேன். அது தெரியாது சார்.
என்றான்.
சரி அம்மாவிடம் கேட்டுக் கூறு என்றேன்.
அதற்குள் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டதும் ஊருக்குச் சென்றுவிட்டான்.

அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான்.
அப்பாவின் இறப்புச் சான்று, வாரிசு சான்று,முதல் தகவல் அறிக்கை, உடற்கூராய்வு சான்று,ஆகியவற்றின் நகலை அனுப்பி வைத்தான்.

தற்போது பயிற்சி ஏடு வாங்க வந்திருந்தான்.
 
"சார் அந்த விண்ணப்பத்தை அனுப்பிச்சாச்சா சார்?" என கேட்க..
அலுவலகத்தில் பாம்பு கடித்தால் அந்த உதவியை பெற முடியாதாம் என்று கூற...
வேணா நீங்க கலைக்டர் ஆபீஸ்ல விசாரியுங்க சார் என்று கூறினர்.

அவனை அழைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றேன்.

சார் அது சமூக நலத்துறை சார்ந்ததாக இருக்கலாம் நீங்க அங்கே புதிய கட்டடத்தில் போய் விசாரியுங்கள் என்றனர்.
அங்கே சென்றபோது இது எங்களுக்குக் கீழ் வராது...
மூனாவது மாடியில் குழந்தைகள் நலத்துறை இருக்கு அங்கு கேளுங்க என்றனர்.

மூனாவது மாடிக்கு சென்று..
அங்கே விசாரித்தால் ஒரு பெண்மணி...மனுவை வங்கிப் பார்த்துவிட்டு..
"சார் இது எஜூகேசன் டிப்பார்ட் மெண்ட் விசயம்.நீங்க அங்கே போய் விசாரியுங்க" என்று கூற...
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சென்றேன்.

"சார் அந்த செக்சன் வரவில்லையே?"
என்ற பதில் வர..
அலுவலக முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி விவரத்தைக் கூறினேன்.

சார் சாலை விபத்து மரணங்களுக்கு மட்டும் தான் அளித்து வருகின்றோம் என்றார்.
நானும்...
"சார் பாம்புகடியும் ஓரு விபத்துதான் சார்.
அதற்கான சான்று எல்லாம் உள்ளது சார்" என்றேன்.

சரி அப்போ ஒன்னு செய்யுங்க...
தாசில்தாரிடம் சென்று
"பாம்பு கடி விபத்தினால் மரணமடைந்தார்"
என்று ஒரு சான்று வாங்கி வாருங்க அனுப்பி விடலாம் என்று கூறினார்.
அந்த மாணவரிடம் கூற..
"சரிங்க சார்"
என்று கூறி பேருந்தில் ஏறிச் சென்றான்.
ஒரு உதவிக்காக எத்தனை கதவுகளை தட்ட வேண்டி உள்ளது.
தட்டிக்களிக்க ஏராளமான காரணம் சொல்லும் சமூகம் பெற்றுத்தர உருப்படியா ஒரு காரணத்தைக் கூற முடியாதது வேதனையே.

No comments:

Post a Comment